கோலாலம்பூர், டிச 19- மலேசியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் வரும் 2023 இல் 40 முதல் 52 விழுக்காடு வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழுக்காடு 7.46 கோடி முதல் 8.08 கோடி பயணிகளை பிரதிபலிப்பதாக மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்) கூறியது.
இவ்வாண்டு நான்காம் காலாண்டு முதல் முக்கிய சந்தைகள் மறுசீரமைப்பு பெறும் காரணத்தால் உள்நாட்டு விமான நிறுவனங்களான மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, ஏர் ஆசியா எக்ஸ், பாத்தேக் ஏர் போன்றவை சேவையை முழுமைப்படுத்தி உள்ளதோடு பயண சேவைகளையும் அதிகரித்துள்ளதாக அந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந் 2022ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் மொத்த விமானப் பயணிகள் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சம் பேராக உயர்ந்ததாக கூறிய மேவ்கோம், பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பதிவான உயரிய பயணிகள் எண்ணிக்கை இதுவாகும் எனக் குறிப்பிட்டது.
ஆகாய மார்க்கமான சரக்கு சேவையும் வரும் 2023ஆம் ஆண்டில் 3 விழுக்காடு முதல் 4.8 விழுக்காடு வரை அதிகரித்து 224 கோடி முதல் 228 கோடி டன் கிலோ மீட்டரை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மின் வர்த்தகம் மற்றும் மின்னியல், மின்சார துறைகளின் வளர்ச்சி சரக்கு சேவையின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.