ECONOMYMEDIA STATEMENT

காரின் மீதிருந்த மர்மப் பொட்டலம் வெடித்தது- உணவகப் பணியாளர் மரணம்

கோலாலம்பூர், டிச 30- காரின் போனெட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மர்மப் பொட்டலம் திடீரென வெடித்ததில் உணவகப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அம்பாங், பண்டான் இண்டா, ஜாலான் பண்டான் இண்டா 12/1இ நேற்றிரவு நிகழ்ந்தது.

இரவு மணி 8.55 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக் எஷாக் கூறினார்.

டோயோட்டா அல்டிஸ் ரக காரின் பொனெட் மீது வைக்கப்பட்டிருந்த அந்த பொட்டலத்தை உணவகப் பணியாளரான அந்த 28 வயது ஆடவர் எடுக்க முயன்றார். அந்த பொட்டலத்தைத் தொட்டதும் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அந்த பொட்டலம் வெடித்தது இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவ்ர தெரிவித்தார்.

உடலிலும் கைகளிலும் பலத்த காயங்களுக்குள்ளான அந்த உள்நாட்டு ஆடவர் உடனடியாக அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எனினும், சிகிச்சை பலனின்றி இரவு 9.45 மணியளவில் உயிரிழந்ததாகவும் அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

அவ்வாடவரின் காரின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சில பொருள்களும் வெடிப்பு நிகழ்ந்ததற்கான அறிகுறியும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் இரகசிய கண்காணிப்பு கேமரா இருந்ததா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த தொடர்பான விசாரணை தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொன்னார்.


Pengarang :