கோலாலம்பூர், ஜன 1- பேராக், கம்போங் காஜா டத்தோ சாகோர் கார் பந்தயத் தடத்தில் நேற்று நிகழ்ந்த விபத்தில் ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடத்தின் ஓரத்தில் நின்றிருந்த ரசிகரை ரசிகரை மோதிக் கவிழ்ந்தது.
அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தங்களை நோக்கி வருவதைக் கண்ட ரசிகர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடத் தொடங்கினர். எனினும், ஒரு ரசிகர் அங்கிருந்து ஓடுவதற்குள் அக்கார் அவரை மோதித் தள்ளியது.
அந்த பந்தயத் தடத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற “சி.சி.டி. பேட்டல் ஆப் சாம்பியன்“ எனும் பந்தயத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்தார்.
இந்த பந்தயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மொத்தம் 60 கார்கள் பங்கு கொண்ட வேளையில் 1,800 சி.சி.க்கும் குறைவான போட்டியில் 12 சத்ரியா கார்கள் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.
பந்தயக் கோட்டை அடைவதற்காக இரு கார்கள் மின்னல் வேகத்தில் சென்ற போது அவை ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின. அதில் ஒரு கார் தடத்தை விட்டு விலகி ரசிகர்கள் இருந்த பகுதியில் நுழைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் சிக்கிய 32 வயது பட்டறை பணியாளர் தலை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக சங்காட் மெலிந்தாங் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரலாக பகிரப்பட்டு வருகிறது.