MEDIA STATEMENTNATIONALPBT

தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த தனயன் கைது

கோலாலம்பூர், ஜன 12- பெற்றத் தாயை தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் 35 வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். தந்தையின் மறைவுக்குப் பிறகு வேறொரு நபருடன் தாய்க்கு உறவு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அந்த ஆடவன் இந்த அடாத செயலைப் புரிந்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 1.00 மணியளவில் தாமான் பெரிண்டுஸ்ட்ரியான் பூச்சோங் உத்தாமாவிலுள்ள தன் தாயாரின் கடைக்குச் சென்ற அந்த ஆடவன் அவரைக் கடுமையாக திட்டி கோப்பு ஒன்றையும் முகத்தில் வீசியெறிந்ததோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய அந்த மூதாட்டி செய்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் அவ்வாடவனைக் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாடவனிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவன் போதைப்பொருளை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், 15 குற்றப்பதிவுகள் அவ்வாடவன் கொண்டிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 506 வது பிரிவின் கீழ் அவ்வாடவனை விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.


Pengarang :