கோல லங்காட், ஜன 21- மாநில அரிசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடையே காணப்படும் சிறப்பான வரவேற்பு காரணமாக அந்த விற்பனை நிகழ்வு அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று மோரிப் தொகுதி உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனையை வாரம் ஒரு முறை நடத்துவது குறித்து இந்த விற்பனைத் திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) பரிசீலிக்க வேண்டும் என்று ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.
மோரிப் தொகுதியில் இவ்வாண்டிற்கான முதல் மலிவு விற்பனை இன்று நடைபெற்றது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது குறைந்த பட்சம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த நிகழ்வு இத்தொகுதியில் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மலிவு விற்பனை தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு தெரிவிக்கும் அதேவேளையில் அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கும்படி கிராமத் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். பி.கே.பி.எஸ்.சின் வசதியைப் பொறுத்து விற்பனைக்கான தேதி வழங்கப்படும். வார நாட்களாக இருந்தால் எளிதில் தேதி கிடைத்து விடும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன என்றார் அவர்.
இன்று இங்குள்ள தாமான் ஸ்ரீ டேசாவில் நடைபெற்ற மோரிப் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விற்பனை தொடர்பான தகவல் பொது மக்களிடம் சரிவர சென்று சேராத போதிலும் இன்றைய நிகழ்வுக்கு பொது மக்களிடமிருந்து ஆமோக ஆதரவு கிடைத்ததாக அவர் சொன்னார்.