ஜோர்ஜ் டவுன், ஜன 24- ஊழல் மூலம் நாட்டின் வளங்கள் கொள்ளையிடப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த பிராந்தியத்தில் மேம்பாடு கண்ட நாடாக மலேசியா உருவாக வாய்ப்பு உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அரசியல் தலைவர்கள், உயர் நிலையிலான அரசாங்க அதிகாரிகள் அல்லது அமலாக்கத் தரப்பினர் ஊழல் நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தங்களுக்கு உரிமை இல்லாத வளங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்காக குத்தகை அல்லது திட்டங்களைப் பெறுவதற்கும் அதற்கான வாய்ப்புகளை அடைவதற்கும் முயலும் தரப்பினர் விஷயத்தில் தாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேற்று இங்கு பினாங்கு முதல்வர் சாவ் கூன் இயோ ஏற்பாடு செய்திருந்த சீனப்புத்தாண்டு பொது உபரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
இனப் பிரிவினை, ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை எதிர்க்கும் தைரியம் கொண்டவர்களாக மலேசியர்கள் இருப்பது அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
மேற்கண்ட தவறான செயல்களை மலேசியர்கள் துடைத்தொழிக்கும் பட்சத்தில் ஏற்கனவே அடைந்ததைப் போல் மிகவும் குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை நாடு அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன மற்றும் சமய நலனை மையமாக கொண்ட எந்த போட்டியும் சமூகத்தில் வெறுப்புணர்வை மட்டுமே விதைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாகரீக சமுதாயம் எனும் சுலோகம் மக்களாகிய நமது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் தங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் சமூகத்தைப் பொறுத்த வரை நமக்கு மனிதாபிமானம்தான் முக்கியம். ஒருவரை ஒருவர் நட்பு பாராட்டாவிட்டால் மனிதாபிமானத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றார் அவர்.