MEDIA STATEMENTPBT

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் முன்னாள் கவுன்சிலர்கள் கௌரவிப்பு

ஷா ஆலம், ஜன 27- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2021/2022ஆம் தவணைக்கு மாநகர் மன்ற உறுப்பினர்களாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரியாவிடை விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிள்ளான், விண்ட்ஹாம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வுக்கு ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட் தலைமையேற்றார்.

கடந்த 2021/2022 தவணைக்கு மாநகர் மன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய எஸ். குமரவேல், எஸ்.பி. சரவணன், சைராபானு, யுவராஜ் உள்ளிட்ட அறுவர் இந்த விருந்து நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த ஈராண்டுகளாக மாநகர் மன்றத்திற்கும் ஷா ஆலம் வட்டார மக்களுக்கும் அவர்கள் வழங்கிய சேவை மற்றும் அர்ப்பணிப்பை நினைவுக் கூறும் விதமாக இந்த விருந்து நிகழ்வு நடத்தப்பட்டதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் நோர் முன்னாள் கவுன்சிலர்களின் அளப்பரிய சேவைக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அவர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ்களையும் நினைவுப்பரிசுகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஓராங் காயா மஹா பிஜாயா பெட்டாலிங், ஓராங் பெசார் பெட்டாலிங் டத்தோ ஹாஜி எம்ரான் ஹாஜி காடீர், துணை டத்தோ பண்டார் ஹாஜி செரெமி ஹாஜி தர்மான், மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர் மன்றத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Pengarang :