கிள்ளான், ஜன 27- சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மேரு சட்டமன்றத் தொகுதிக்கு இவ்வாண்டு ஒதுக்கப்படும் 500,000 வெள்ளி மானியம் மூலம் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்தொகுதியில் அடையாளம் காணப்பட்ட தரம் உயர்த்தும் மற்றும் அடிப்படை வசதிகளை பராமரிக்கும் பணி வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபாக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.
ஆர்ஜிதம் செய்யப்படாத சாலைகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் முறையை சீரமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர, பழுதடைந்த சமூக மண்டபம் உள்ளிட்ட பொது வசதிகளை மேம்படுத்தும் பணியும் இந்த நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
வட்டார மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான சிறு திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் வட்டார பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் 2 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடநதாண்டு 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.