குவாந்தான், ஜன 27- எல்லைப் பகுதியில் உள்ள மலைச்சரிவுகள் மற்றும் உயர் நிலங்களின் பாதுகாப்பில் சிலாங்கூர் மற்றும் பகாங் மாநில அரசுகள் கவனம் செலுத்தவுள்ளன. இரு மாநிலங்களுக்கிடையிலான இரு வழி ஒத்துழைப்பில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களில் இந்த விவகாரமும் அடங்கும் என்று பகாங் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.
மலைச்சாரல்களின் பாதுகாப்பு தொடர்பான விவாகரத்தை கூட்டரசு அரசு நிலையிலும் எழுப்ப இரு மாநிலங்களும் இணக்கம் கண்டுள்ளதாக அவர் சொன்னார்.
மலைச்சாரல் பாதுகாப்பில் சிலாங்கூர் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக தேசிய மலைச்சாரல் மன்றத்திற்கு மறுபடியும் புத்துயிரூட்டுவதும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்பின் பாதுகாப்புக்காக இரு மாநிலங்களின் உயர் நில மேம்பாட்டு நடவக்கைகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
கெந்திங் ஹைலண்ட்ஸ் போன்ற உயர் நிலங்கள் மேம்பாடு ரீதியாக மட்டுமின்றி விதிமுறைகள், சட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு ரீதியாகவும் ஒருமுகப்படுத்த அல்லது ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
ஏனென்றால், சிலாங்கூர், பகாங் ஆகிய இரு மாநிலங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. அதே சமயம், ஒரே மாதிரியான சாதக – பாதக அம்சங்களையும் அவை கொண்டுள்ளன என்றார் அவர்.
இங்குள்ள விஸ்மா ஸ்ரீ பகாங்கில் இன்று நடைபெற்ற சிலாங்கூர்-பகாங் இடையிலான இருவழி ஒத்துழைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.