ஷா ஆலம், பிப் 6- பண்டமாரான், தாமான் சீ லியோங்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தென் கிள்ளான் மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 269,086 வெள்ளி மதிப்பிலான பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
சம்பந்தப்பட்ட அப்பகுதியில் மாலை 5.00 மணியளவில் கோலக் கிள்ளான் கடல் போலீஸ் உளவுப் பிரிவினர் அப்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 25 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹூங் ஃபோங் கூறினார்.
அந்த ரோந்து நடவடிக்கையின் போது அவ்விரு ஆடவர்களும் லோரி ஒன்றிலிருந்து பொருட்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகளை கிடங்கு ஒன்றில் இறக்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வரி செலுத்தப் படாதவை என சந்தேகிக்கப்படும் 317 போத்தல் மற்றும 7,560 டின் மதுபானங்கள் இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மொத்த மதிப்பு 369,086.08 வெள்ளியாகும் என்றார் அவர்.
அவ்விரு ஆடவர்களும் 1967ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் 135(1)(டி) பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்