ALAM SEKITAR & CUACAECONOMY

மக்களின் கரகோஷத்திற்கு மத்தியில் மந்திரி புசார் பூப்பந்து விளையாடினார், பெனால்டி வழி கோலடித்தார்

கோம்பாக், பிப் 26- இங்கு நேற்று நடைபெற்ற கோம்பாக் மாவட்ட நிலையிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில் மந்திரி புசார் பங்கேற்று தனது ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.

கிளாங் கேட் தேசிய பள்ளியில் உள்ள உள்ளரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் போது டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளிப்படுத்திய ஆட்டத் திறனைக் கண்டு பொதுமக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

சுமார் 20 நிமிடங்களை அங்கு செலவிட்ட மந்திரி புசார் நிகழ்வுக்கு வந்தவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை எடுத்து வழங்கினார்.

கிளாங் கேட் பாரு கிராம சமூக நிர்வாக மன்றத்தின் ஏற்பாட்டிலான இந்த பூப்பந்துப் போட்டியில் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் 300 பேர் பங்கு கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கே‘தாஸ் எப்.சி. மற்றும் ஹைப்பர்நோவா எ.சி. குழுக்களுக்கிடையே நடைபெற்ற நட்பு முறை கால்பந்து போட்டி நிகழ்வுக்கு அவர் வருகை புரிந்தார்.

அங்கு சுமார் 20 நிமிடங்களைச் செலவிட்டு விளையாட்டாளகர்களுடன் அளவளாவியதோடு பெனால்டி கோலையும் அடித்தார்.


Pengarang :