ஈப்போ, மார்ச் 12 - உயிர்கள் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் நாட்டுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதிலும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு பங்கு வகிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களின் வேகமும் திறமையும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைத்துள்ளது என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார். அவர்களின் சேவைகள் எப்போதும் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்புத் துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகரிக்க அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்று அவர் குறிப்பிட்டார். தீயணைப்பு துறைக்கு போதுமான ஒதுக்கீடு இருக்கிறதா என்று நாங்கள் கேட்டால், அது போதாது என்று நான் கூறுவேன். ஆனால் பொருளாதாரம் மீண்டு வரும்போது சம்பந்தப்பட்ட அமைச்சுக்கான ஒதுக்கீட்டை எப்போதும் அதிகரிப்போம் என்று தம்பூன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போது தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங்கும் கலந்து கொண்டார். ஒட்டுமொத்தமாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகள் சிறந்த நிலையில் இருப்பதாக அன்வார் தமதுரையில் பாராட்டினார். இதற்கிடையில், தம்பூன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் "டி" பிரிவு நிலையத்திலிருந்து "சி" பிரிவு நிலையமாக மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/12/tanah-runtuh-1-960x640.jpg)