ஷா ஆலம், மார்ச் 18- மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு வராத வகையில் இன, சமய வேறுபாடின்றி அனைத்து இன மக்களின் நலன்களையும் கெ அடிலான் கட்சி காக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
பொது மக்களுக்கு குறிப்பாக விவசாயிகள் மற்றும் சிறுதோட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஏராளமான உதவித் திட்டங்கள் மூலம் இந்த உண்மையை அறிய முடியும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாங்கள்தான் உண்மையான மலாய் போராட்டவாதிகள். அரசாங்க பணத்தை எடுத்து சொந்தப் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்று அவர் சொன்னார்.
மக்களின் நலனைக் காப்பதில் நாங்கள் முனைப்பு காட்டுகிறோம். தலைவர்களுக்கு கையூட்டு வழங்குவதற்காக அல்லது மக்களை வாங்குவதற்கு நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. நாங்கள் கொள்கையின் அடிப்படையில், அப்படிப்பட்டவர்களை எதிர்த்து போராடுகிறோம் என்று இன்று இங்கு நடைபெற்ற கெ அடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிழக்குக் கரை மாநிலங்களுக்கு குறிப்பாக கெடா மற்றும் பெர்லிஸ் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை தாங்கள் செய்துள்ளதாக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கம் சிறு விவசாயிகளின் நலனை காப்பதற்காக எதுவும் செய்யவில்லை. இது தவிர ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி ஆர்.யு.யு.355 சட்டத்தை திருத்தவும் இல்லை என்றார் அவர்.
இன உணர்வுகளை தூண்டுவதற்காக அதிகாரம் பறிபோய் விட்டது எனக் கூற வேண்டாம். மூன்று ஆண்டுகள் நீங்கள் பதவியில் இருந்தார்கள். ஆர்.யு.யு. 355 எங்கே? கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா வுக்கு மேம்பாட்டு நிதி எங்கே? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். மூன்று ஆண்டுகளாக அவர்கள் ரப்பர் விலையை உயர்த்தவில்லை. நாம் இம்முறை உயர்த்தி உள்ளோம். இந்த தகவலை மக்களிடம் தெரிவியுங்கள் என பேராளர்களை அவர் கேட்டுக்கொண்டார்..