ஷா ஆலம், மார்ச் 24- ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் 4இல் உள்ள இரு கைப்பந்து மைதானங்கள் 50,000 வெள்ளிச் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
ரவாங் தொகுதியின் நிதி ஒதுக்கீட்டிலான இந்த சீரமைப்புத் திட்டம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முற்றுப் பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
கைப்பந்து போட்டியில் மாவட்டத்தைப் பிரதிநிதித்து விளையாடும் இத்தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பயற்சி பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த மைதானம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வட்டார இளையோர் ஓய்வு நேரங்களில் இந்த திடலில் கைப்பந்து விளையாடுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. இரவிலும் இந்த திடல்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இதில் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இளையோர் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து தங்கள் நேரத்தை நல்ல வழியில் செலவிட இத்தகைய வசதிகள் பெரிதும் துணை புரியும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த கைப்பந்து மைதானத்தை தரம் உயர்த்துவதை மேம்பாட்டுக் கோணத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. இளையோர் தவறான வழியில் செல்வதைத் தடுப்பதில் இத்தகைய வசதிகள் ஆற்றும் பங்கினையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.