ECONOMYPBT

முகக்கவச உத்தரவை வணிகர்கள் கடைபிடிப்பதை எம்.பி.எஸ். தொடர்ந்து கண்காணிக்கும்

செலாயாங், ஏப் 1– நோன்பு மாதம் தொடங்கியுள்ள நிலையில் உணவக மற்றும் உணவு அங்காடி நடத்துநர்கள் கட்டாய முகக் கவச உத்தரவைப் பின்பற்றுவதை உறுதி செய்ய செலாயாங் நகராண்மைக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வணிகர்கள் குறிப்பாக, பாசார் மாலாம் மற்றும் ரமலான் சந்தை வியாபாரிகளில் பெரும்பாலோர் இந்த உத்தரவை பின்நடப்பது தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் அடி பைசால் அகமது தர்மிஸி கூறினார்.

உணவுகளைக் கையாள்வோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறையை செலாயாங் நகராண்மைக் கழக நிலையில் நாங்கள் அமல்படுத்தி விட்டோம். எனினும், ஒரு சிலர் அந்த உத்தரவை இன்னும் பின்பற்றாமலிருக்கின்றனர். பெரும்பாலும் தனி ஒருவராக வியாபாரம் செய்வோர் மத்தியில்தான் இந்த குறைபாடு காணப்படுகிறது என்றார் அவர்.

இருந்த போதிலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது என்று செலாயாங் நகராண்மைக் கழகத்தின் இவ்வாண்டிற்கான மூன்றாவது கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

உணவு வியாபாரத்தில் சுத்தம் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை தாங்கள் தொடர்ந்து அமல்படுத்தி வருவதோடு வியாபாரிகள் இந்த உத்தரவைப் பின்பற்றி நடப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து சோதனைகளை நடத்தியும் வருவதாக அவர் சொன்னார்.

முதல் முறையாக இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையாக தவறிழைப்போருக்கு  அபராதமும் தொடர்ந்து அதே தவற்றைப் புரிவோருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வியாபாரம் செய்வதற்கு தடையும் விதிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :