ஷா ஆலம், ஏப் 9- சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின் உற்பத்தி பொருள்கள் அடங்கிய 4,000 உணவுக் கூடைகள் மாநிலத்தில் உள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நோன்பு மாத தொடக்கத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
நோன்பு திறப்புக்காக உணவுகளைத் தயார் செய்வதில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைப்பதற்காகவும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் உற்பத்தி பொருட்கள் விளம்பரம் படுத்துவதற்காகவும் இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டதாக பாரம்பரிய கிராமத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.
இந்த திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் கிராமத் தலைவர்கள் வாயிலாக இந்த உணவுக் கூடைகளை பகிர்ந்தளித்து வந்தோம். ஆனால், இம்முறை இத்திட்டத்தில் தகுதியானவர்களை அடையாளம் காணும் பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்றார் அவர்.
நோன்பு மாத தொடக்கத்திலேயே இந்த இத்திட்டத்தை நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த உணவுக் கூடைகளைப் பெற்றவர்களிடமிருந்து சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் புதிய ஆடர்களைப் பெறத் தொடங்கி விட்டனர் என்றார் அவர்.