அம்பாங், ஏப் 14- கம்போங் தாசேக் பெர்மாய், கெலெம்போக் சமார் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள நீர்த் தொட்டி மற்றும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவைச் சரி செய்ய எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் 13,000 வெள்ளியை வழங்கியுள்ளது.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வின் போது இந்த நிதியை எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத் தலைவர் முகமது கைருள் அனுவார் முகமது சுஹாய்மியிடம் ஒப்படைத்தார்.
அதே சமயம், தெராத்தாய் தொகுதி ஒருங்கிணைப்பாளர் இங் ஸீ ஹான் வழங்கிய 100 உணவுக் கூடைகளையும் வசதி குறைந்தவர்களுக்கு எம்.பி.ஐ. பகிர்ந்தளித்தது.
அந்த குடியிருப்பில் நிலவும் நீர் கசிவு தொடர்பில் வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை நேரில் கண்டறிவதற்காக தாம் அப்பகுதிக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வருகை மேற்கொண்டதாக அகமது அஸ்ரி தெரிவித்தார்.
பாதிப்பை நேரில் கண்டறிந்தப் பின்னர் நீர் சேகரிப்புத் தொட்டி மற்றும் குழாய்களைச் சரி செய்வதற்கு 13,000 வெள்ளியை நாங்கள் அங்கீகரித்தோம் என அவர் குறிப்பிட்டார்.
இரு புளோக்குகளைக் கொண்ட அந்த 20 வருட அடுக்குமாடி குடியிருப்பில் 400 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.