ஷா ஆலம், ஏப் 21- இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வரியை வசூலிப்பதில் மாநில அரசு பதிவு செய்த சிறப்பான அடைநிலையின் காரணமாக சிலாங்கூரிலுள்ள மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெருநாள் வெகுமதி வழங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு வெகுமதியாக வழங்கப்பட்ட வேளையில் ஆசிரியர்கள், போலீஸ் துறையினர் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு 200 வெள்ளி அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாநில அரசின் நிர்வாக காலத்தில் குறிப்பாக இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வரியை வசூலிப்பதில் மாநில அரசு அடைந்த சாதனையைக் கருத்தில் கொண்டு 2023ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை அறிவிக்கிறேன் என்றார் அவர்.
நாளைக் கொண்டாடப்பட விருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாநிலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.