கோலாலம்பூர், ஏப் 23– பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மீதான மக்களின் மனவோட்டம் ஆதரவும் மிகவும் நேர்மறையானதாக உள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில கருத்துக் கணிப்புகள் மக்களின் சாதகமான உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தொடர்பு பிரிவு இயக்குநருமான அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்களுக்கு மக்கள் ஆதரவளித்த போதிலும் அலட்சியத்துடன் கனவுலகில் சஞ்சரிக்கும் போக்குடனும் இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி மக்களின் பிரச்சினைகளைக் களைவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பணவீக்க விகிதம் 3.4 விழுக்காடாக குறைந்துள்ளதை புள்ளி விபரத் துறையின் தரவுகள் காட்டுகின்றன. பொருட்களின் விலையை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உள்ளதை இது காட்டுகிறது. இருந்த போலும் இன்னும் சாதிப்பதற்கு நிறைய உள்ளது என்றார் அவர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விருந்து நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் தெங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்..