கூச்சிங், ஏப் 28- பொது இடங்களில் அல்லது கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் உள்ள பகுதிகளில் பொது மக்கள் முகக் கவசம் அணிவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
புதிய ஒமிக்ரோன் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
முகக் கவசம் அணிய பொது மக்களை நாம் ஊக்குவிக்கிறோம். ஆனால் கட்டாயப் படுத்தவில்லை. மலேசியாவைப் பொறுத்த வரை நோய்த் தொற்று சம்பவங்கள் குறைந்து வருவதை தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.
ஓமிக்ரோன் திரிபுகளுடன் தொடர்புடையவையாக இருந்த போதிலும் தற்போதைய கோவிட்-19 நிலவரங்கள் குறித்து நாம் பதட்டமடையத் தேவையில்லை. இச்சம்பவங்கள் 1 மற்றும் 2ஆம் கட்டத்தில்தான் உள்ளன. ஆகவே, நாம் நடப்பிலுள்ள சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி.) தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இதன் அடிப்படையில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கிறோம் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அந்நோய்ப் பரவலின் ஆகக்கடைசி நிலவரங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தொற்றாக எக்ஸ்.பி.பி. 1.16 எனும் புதிய வகை திரிபு விளங்குவதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த வகை திரிபு இதுவரை 30 நாடுகளுக்கு பரவியுள்ளது