சிப்பாங், ஏப் 29- மாநிலத் தலைவர்களை மக்கள் சந்திப்பதற்குரிய வாய்ப்பினை வழங்கும் நோக்கில் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி பொது உபரிப் பு நிகழ்வினை மாநில அரசு நடத்துவதாக மந்திரி புசார் கூறினார்.
இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளதோடு இதில் பங்கேற்பதற்காக பலர் முன்கூட்டியை நிகழ்விடத்திற்கு வந்து விட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நிகழ்வின் முதல் இடமாக சிப்பாங் விளங்குகிறது. இதில் 10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். இந்த நிகழ்வு இன்று உலு சிலாங்கூரிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிள்ளானிலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
வாரந்தோறும் நடைபெறும் இந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் வாயிலாக வட்டார மக்கள் மாநிலத் தலைவர்களையும் துறைகளின் தலைவர்களையும் சந்திப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
மாநில அரசு கடந்தாண்டு தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்தி வருகிறது என்றார் அவர்.
சிப்பாங், பெக்கான் சாலாக் பாசார் மாலாம் வளாகத்தில் நேற்றிரவு நடைபெற்ற சிப்பாங் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் இந்த பொது உபசரிப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு நிகழ்வுக்கும் 200,000 வெள்ளி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பொது உபசரிப்பை நடத்துவதற்கு நாங்கள் தலா 200,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்கிறோம். இந்நிகழச்சிக்கு மெருகூட்டுவதற்கு ஊராட்சி மன்றமும் மாவட்ட அலுவலகம் தங்கள் பங்கிற்கு நிதி திரட்டுகின்றன என்றார் அவர்