ECONOMYMEDIA STATEMENT

சமூக சேவையோடு நகர மேம்பாட்டிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் பன்னீர்

பந்திங்.மே.14-  கோல லங்காட்  நகராண்மைக் கழக  உறுப்பினராக பன்னீர் செல்வம் கடந்த இரண்டு தவணையாக சேவையாற்றி வருகிறார். நகராண்மைக் கழக  உறுப்பினர் என்ற முறையில் கோல லங்காட் வட்டாரம் முழுவதும் தீவிர சமூக சேவை செய்வதோடு நகராண்மைக் கழக  மேம்பாட்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாகாது.
கோல லங்காட்  நகராண்மைக் கழகத்தில்   ஐந்து இந்திய பிரதிநிதிகள்  உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பன்னீர்செல்வம். இவர் கோல லங்காட் தொகுதி மக்கள் நீதிக் கட்சியின் ( பி.கே.ஆர் ) உதவித் தலைவராகவும்  பொறுப்பு வகிக்கிறார்.
இத்தொகுதியில் உள்ள இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் சமூகவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். மேலும் தீபாவளி, நோன்பு பெருநாள், சீன புத்தாண்டு போன்ற பெரு நாட்களுக்கும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதையும் தனது வருடாந்திர நடவடிக்கைகளாக கொண்டுள்ளார்.
இதனைத் தவிர்த்து  வாய்க்கால், சாலை பராமரிப்பு மற்றும் சாலை செப்பனிடுதல் வேலைகளிலும் தாம் தீவிரம் காட்டி வருவதாக கூறிய அவர்.  ஆண்டுதோரும்  சுதந்திர நாள் கொண்டாட்டமும் இவரின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்  என்றார்.
 நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்று  அதிகரிக்க சுதந்திர நாள் கொண்டாட்டம் வழி வகை செய்கிறது. ஒரு மாத காலத்திற்கு சுதந்திர நாள் கொண்டாட்டம் நடைபெறும். மலேசிய கொடி வீட்டுக்கு வெளியே பறக்க விடுதல், பள்ளி மாணவர்களுக்கு இலவச கொடி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் மாதம் முழுவதும் நடைபெறும்.
தொகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உடல் ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலி, காலணி, உதவி நிதி போன்றவற்றை தனது சேவையாக வழங்கி வருகிறார்.
அதே வேளையில் கோல லங்காட் நகர மன்றத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மரம் நடும் நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாண்டுக்குள் 150,000 மரங்கள் கோல லங்காட் வட்டாரம் முழுவதும் நட வேண்டும் என்பது நகர மன்றத்தின் இலக்காகும். அந்த இலக்கை அடைய வட்டார மக்கள் வீட்டுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கோல லங்காட் வட்டாரத்தில் தெரு நாய்கள் பெருகி வருகின்றன. இந்த தெரு நாய்களை பராமரிக்க  காப்பகத்தை கோல லங்காட் நகர மன்றம் அமைக்க உள்ளது. தெரு நாய்கள் சுட்டுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாய்கள் பராமரிப்பு பகுதியில் கை விடப் பட்ட பூனைகளும் பராமரிக்கப்படுகின்றன.
இதே போல் குரங்குகளும் அதிகரிக்க தொடங்கி விட்டன. இந்த குரங்குகளையும் முறையாக பராமரிக்க ஓர் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.. மிருகங்களை வதைக்க கூடாது என்று சிலாங்கூர் மாநில சுல்தானா அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தலை ஏற்று கோல லங்காட்  நகராண்மைக் கழகம் மேற்கொண்ட பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்.
மேற்கண்ட சேவைகள் யாவும் தனது வட்டாரத்திலும் தான் மட்டுமின்றி  நகராண்மைக்கழக அதிகாரத்துக்கு  உட்பட்ட பகுதிகளில் நகராண்க்கழக உதவியுடன் மேற்கொள்ளப் படுவதாகவும் பன்னீர் செல்வம்  தெரிவித்தார்.

Pengarang :