கோல சிலாங்கூர் மே 22 ; சித்தம் சிலாங்கூர் ஒத்துழைப்புடன் கோல சிலாங்கூர் மாவட்ட நகராண்மைக் கழகம் (zon 14) ஏற்பாட்டில் அணிச்சல் தயாரிக்கும் பயிற்சி பட்டறை ஒன்று தாமான் பஞ்சாரான் பாலாய் ராயாவில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்தியப் பெண்கள் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் நடைபெறும் இந்த அணிச்சல் தயாரிப்பு பயிற்சி பட்டறையில் சுமார் 32 – பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அதன் முதல் அங்கமாகக் கோல சிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர் திரு :குணசேகரன் சுப்ரமணியம் பேசுகையில் இன்றைய அணிச்சல் பயிற்சி பட்டறை நிகழ்விற்கு சிரமம் பாராமல் வருகை புரிந்த அனைவருக்கும் தன் மனமார்ந்த நன்றியினை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதாக கூறி அனைவரையும் வரவேற்றார்.
இன்று நீங்கள் இந்த 5 – மணி நேர நிகழ்வில் கற்றுக் கொள்வதை, நீங்கள் உங்கள் வீட்டில் மீண்டும் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். அதன் வழி நீங்கள் கற்றதில் எவ்வளவு தேர்ச்சி அடைந்துள்ளீர்கள், என்பதற்கு அளவுகோலாக அமையும். அதுவே நீங்கள் கற்றது உங்களுக்கு ஒரு உபரி வருமானத்தை ஈட்ட வழி செய்யுமா என்பதை உணர்த்தும்.
அந்த வெற்றி, எதிர்வரும் காலங்களில் நீங்கள் ஓர் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார். .இன்றைய காலக்கட்டத்தில் நம்மவர்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.அதில் நீங்களும் ஓர் சாதனைப் பெண்ணாக திகழ வேண்டும் என்றால் இது போன்ற பயிற்சிகள் தான் உங்களை ஓர் நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த அணிச்சல் தயாரிப்பு பட்டறைக்கு சிறப்பு விருந்தினராக வருகை அளித்த கோலசிலாங்கூர் கெ அடிலான் தலைவர் திரு : தீபன் சுப்ரமணியம் தமது உரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலருக்கு வீட்டில் பல வேலை இருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இங்கு வந்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஒருவருக்கு ஆர்வம் இருந்தால் தான் அவர்கள் அதற்கான பலனை அடைவார்கள்.அப்படி இருந்தும் அதற்கான பயிற்சிகள், வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால். எண்ணங்கள் கனவாகி கலைந்துவிடும். அதனால் இங்கு உங்கள் எண்ணங்கள் ஈடேற வாய்ப்பாக இந்தப் பயிற்சிகள் விளங்குகிறது. அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் – நீங்கள் அனைவரும் இன்றைய அணிச்சல் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு வியாபாரத் துறையில் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இன்றைய நிலையில் பெண்கள் பல வியாபாரத்தில் முன்னேறி வருகின்றனர். அதன் அடிப்படையில் கிடைக்கும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி, வெற்றியாளராக ஆக, நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அரசாங்கமும் அதற்கு ஆதரவாக பல திட்டங்களை முன் வைத்துள்ளது என்பதற்கு இந்த அணிச்சல் செய்யும் பயிற்சி பட்டறை ஓர் ஆதாரம் என்றார்..
சித்தம் சிலாங்கூர் அதற்கான பொருட்களை கொடுப்பதற்குத் தயார் நிலையில் உள்ளது. மித்ரா திட்டமும் உதவ இருப்பதாக அவர் கூறினார். கோலசிலாங்கூர் நகராண்மை கழகம் (Zon 14) உறுப்பினர் குணசேகரன் சுப்ரணியம் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை கூறிக்கொண்டார்.
இப்பயிற்சிக்கு வருகை அளித்த அனைத்து பெண்களுக்கும் நற்சான்றிதல், அணிச்சல் தயாரிக்க ஒரு (மிக்சர்) இயந்திரம் வழங்கப்பட்ட இந்த பயிற்சி பட்டறை நண்பகல் 2:00 – மணி அளவில் சிறப்பாக முடிவுற்றது.