செய்தி- சுப்பையா சுப்ரமணியம்
கிள்ளான்.மே. 28- 2023 ஆம் ஆண்டு சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் போட்டி கலை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ஆரம்ப பள்ளி மாணவர்கள் கலைத் திறனை அடையாளம் கண்டு வெளி கொண்டு வர இரண்டாம் ஆண்டாக சிலாங்கூர் மாநில அரசு ஆதரவோடு நடத்துவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசின் மாபெரும் ஆதரவோடு இலவசமாக இப்பாடல் திறன் போட்டி நிகழ்ச்சி, சிலாங்கூர் மாநில தமிழ் கலைஞர் இயக்கத்தின் தொழில்நுணுக்க ஆலோசனை ஆதரவோடு சிறப்பாக நடைபெற்றது.
கல்வியில் சிறப்பு தேர்ச்சி அல்லது ஈடுபாடு குறைந்த மாணவர்களிடம் மற்ற திறன்கள் ஒளிந்திருப்பதை அடையாளங்கண்டு அவர்களையும் ஊக்குவிப்பதற்கு இப்படி பட்ட நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
இந்த பாடல் திறன் போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஒரு தளமாக அமையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார்.
இதே போல் சிலாங்கூரில் உள்ள 98 தமிழ்ப் பள்ளி மாணவர்களை திடல் தட போட்டியில் ஊக்குவிப்பதற்காக பிரத்தியேகமாக மாநில அளவிலான போட்டி விளையாட்டு நிகழ்ச்சியையும் நடத்த போவதாக அவர் கூறினார்.
இந்த சிறப்பு கலை நிகழ்ச்சி மகத்தான அளவில் வெற்றியடைய சிலாங்கூர் மாநில இந்திய நகராண்மை கழக உறுப்பினர்கள், சிலாங்கூர் மாநில இந்திய சமுதாய தலைவர்களும் பெரும் ஆதரவு கொடுத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த சிறப்பு கலைநிகழ்ச்சியை நாடறிந்த கலை நிகழ்ச்சி தொகுப்பாளர் காப்பார் பி ஆர்.ஜெயசீலன் மற்றும் வீரம்மா தேவி தொகுத்து வழங்கினார்கள்.
இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 500 பேர் கண்டு களித்தனர் என்பது குறிப்பிட தக்கது.