கோலாலம்பூர், ஜூன் 29- இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரை ஈர்ப்பதற்காக மலேசிய ஆயுதப்படை பள்ளிகளில் தகவல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
ஆயுதப்படையின் ஒரு பிரிவாக விளங்கும் இராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பூமிபுத்ரா அல்லாதோர் மற்றும் இளையோருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக ஆயுதப்படை தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ முகமது அப்துல் ரஹ்மான் கூறினார்.
இராணுவத்தில் சேர்வோர் அப்படையில் உயர்பதவிகள் பெறுவதற்கு ஏதுவாக மேற்கல்வி பெறுவதற்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சுங்கை பீசியிலுள்ள பெர்டானா முகாமில் இன்று நடைபெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் பலியிடல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இராணுவத்தில் பூமிபுத்ரா அல்லாதோரை ஈர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.