கோலாலம்பூர், ஜூன் 30- பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் கடனை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கை அந்த வாரியத்தின் ரொக்கப் புழக்கத்தை சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வழி பெல்டா நில குடியேற்றவாசிகளின் நலன் பாதுகாக்கப்படுவது உறுதி செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாங்க உத்தரவாதத்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தின் வாயிலாக நிதி நிறுவனங்களிடம் அந்த வாரியம் செலுத்த வேண்டிய அடிப்படை கடனை 790 கோடி வெள்ளியாக குறைக்க முடியும் என்பதோடு இதன் மூலம் இளம் தலைமுறை பெல்டா குடியேற்றவாசிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று பெல்டா தேசிய குடியேற்றவாசிகள் அமைப்பின் தலைவர் சூலோங் ஜாமில் கூறினார்.
இந்த நடவடிக்கையின் மூலம் பெல்டா ஈட்டும் வருமானம் இனி கடனை அடைப்பதற்கு மட்டுமின்றி லாபம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
நாடு முழுவதும் உள்ள 317 நிலக் குடியேற்றத் திட்டங்களில் 120,000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பெல்டாவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் வாயிலாக டெல்டாவின் கடன் தொகைக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இதன் மூலம் பெல்டா குடியேற்றவாசிகளின் 830 கோடி வெள்ளி கடன் தொகையில் 80 விழுக்காடு வரை தள்ளுபடி செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.