கோலாலம்பூர், ஜூலை 22- உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹூடின் ஆயோப்பிற்கு மூளையில்
இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக
அவரது பத்திரிக்கைச் செயலாளர் நுர் ஷியாகிரின் ஹூஸ்னுள் தெரிவித்துள்ளார்.
கெடா, அலோர்ஸ்டார் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சலாஹூடினுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ சலாஹூடின் நலம் பெறுவதற்கு பிரார்த்தனை செய்த அனைத்துத் தரப்பினருக்கும் அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நுர் ஷியாகிரின் கூறினார்.
சலாஹூடினுக்கு நேற்றிரவு 10.15 மணியளவில் கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
அமைச்சரின் உடல் நிலை தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் n குறிப்பிடப்பட்டுள்ளது.