ஷா ஆலம், ஜூலை 22- வரும் மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசு மீண்டும் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மக்கள் மேலும் அதிகமான அனுகூலங்களை பெறுவார்கள்.
மாநில அரசும் மத்திய அரசும் ஒரே கருத்துடைய தாக இருந்தால் அதிகமான அடிப்படை வசதி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை எளிதாக அமல்படுத்த முடியும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எழுபதாம் மற்றும் எண்பதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட உலு கிளாங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.
மாநிலத்தை ஆள்வதற்கு மேலும் ஒரு முறை வாய்ப்பளிக்கப் பட்டால் முதலாவது ஆண்டிலேயே இங்கும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நான் வருகை புரிந்து மக்களின் வசதிக்காக இரண்டு அல்லது மூன்று அறைகளைக் கொண்ட வீடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன் என அவர் தெரிவித்தார்.
நான் பொய்யான வாக்குறுதியை வழங்கவில்லை. ஏற்கனவே பல இடங்களில் இது போன்ற திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒன்றாக உள்ளதால் அதை அமல்படுத்த முடியும் என நம்புகிறேன் என்றார் அவர்.
நேற்று இங்கு சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரதமருடன் உலு கிளாங் மக்கள் எனும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
ஜெலாஜா ஏசான் ராக்யாட் மற்றும் இன்சான் எனப்படும் இலவச காப்புறுதி திட்டம் உள்ளிட் 46 மக்கள் நலத் திட்டங்களின் வாயிலாக மாநில மக்களின் நலன் காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை அது அமல்படுத்தியுள்ளது எனவும் அமிருடின் குறிப்பிட்டார்.