ஷா ஆலம், ஆக 18- சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசார் நியமனம் தொடர்பான அறிவிப்பை அரண்மனைத் தரப்பு வெளியிடும் என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றதாகவும் இச்சந்திப்பின் போது மாநிலத்தின் நடப்பு நிலவரங்கள் குறித்து தாம் சுல்தானிடம் எடுத்துரைத்த தாகவும் அவர் சொன்னார்.
நான் வழக்கம் போல் மேன்மை தங்கிய சுல்தானை சந்தித்தேன். அவரிடம் நலம் விசாரித்த தோடு சில விவகாரங்கள் குறித்தும் விவாதித்தோம். மாநிலத்தின் நடப்பு நிலவரம், பொருளாதார மேம்பாடு மற்றும் துவாங்குவின் உடல் நலம் போன்ற வழக்கமான அம்சங்கள் இந்த சந்திப்பில் இடம் பெற்றன என்றார் அவர்.
இங்குள்ள புக்கிட் காயாங்கானில் மேன்மை தங்கிய சுல்தானை நேற்று மாலை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த ஒரு மணி நேர சந்திப்பில் புதிய மந்திரி புசார் நியமனம் குறித்து விவாதிக்கப் பட்டதா என வினவப்பட்ட போது, அந்த சந்திப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் வெளியிட முடியாது என அவர் பதிலளித்தார்.
சிலாங்கூர் மந்திரி புசார் வேட்பாளர் பட்டியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதனை நீங்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம்தான் கேட்க வேண்டும். காரணம் இவர்தான் அந்த பட்டியலை அனுப்பினார் என்று அமிருடின் சொன்னார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணி 34 இடங்களையும் பெரிக்காத்தான் நேஷனல் 22 இடங்களையும் கைப்பற்றின.