ஷா ஆலம், ஆக 19- பண்டார் எல்மினா அருகே கத்ரி நெடுஞ்சாலையில் இரு தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மந்திரி புசாருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி. சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா, பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் ஆகியோரும் மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த போது நான் மிகுந்த வேதனையும் ஆழந்து துயரும் அடைந்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு துயரிலிருந்து மீள்வதற்கும் பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கத் மாநில அரசு தயாராக உள்ளதாக எக்ஸ் சமூக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
முன்னதாக, இந்த விபத்தில் பலியான பத்து பேரின் குடும்பத்தினருக்கு குறிப்பாக நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்லடக்கச் சடங்கிற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் அன்வார் சொன்னார்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த இலகு ரக விமான விபத்தில் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உள்பட ஆறு பயணிகள் மற்றும் இரு விமானிகளும் பலியாகினர்.
இச்சம்பவத்தின் போது சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.