ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கு 21ஆம் தேதி நடைபெறும்-அரண்மனை அறிவிப்பு

ஷா ஆலம், ஆக 19- சிலாங்கூர் மாநில மந்திரி மந்திரி புசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி உறுதி மொழி, இரகசிய காப்பு பிரமாணம் மற்றும் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு வரும் திங்கள் கிழமை நடைபெறும்.

இந்த பதவியேற்பு வைபவம் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தலைமையில் கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷா, பாலாய் ரோங்ஸ்ரீயில் நடைபெறும்.

இம்மாதம் 21ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மந்திரி புசாரின் பதவியேற்பு, இரகசிய காப்பு பிரமாணம் மற்றும் பதவி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்க மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதே சமயம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு, இரகசிய காப்பு பிரமாணம் மற்றும் பதவி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்கவும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இணக்கம் தெரிவித்துள்ளார் என சிலாங்கூர் அரண்மனையின் பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மாநில சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 56 தொகுதிகளில் 34ஐ கைப்பற்றியதன் மூலம் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. .


Pengarang :