ஷா ஆலம், ஆக 22 – மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர்
மாநில அரசு தலைமைச் செயலக கட்டிடத்தில்
இன்று காலை இரண்டாம் தவணைக்கான
மந்திரி புசார் பொறுப்புகளை
அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
காலை 7.58 மணிக்கு தலைமைச் செயலக
கட்டிடத்தின் 21வது மாடியிலுள்ள தனது அலுவலகத்திற்கு வந்த
மந்திரி புசார், காலை 8.00 மணியளவில்
அலுவலக வாயிலில் ஸ்கேன் செய்தார்.
மாநில அரசு தலைமைச் செயலகம்
வந்த மந்திரி புசாரை, மாநிலச் செயலாளர்
டத்தோ ஹரிஸ் காசிம் மற்றும் நிர்வாக
ஊழியர்கள் வரவேற்றனர்.
மாநிலத்தின் 16வது மந்திரி புசாராக
விளங்கும் அமிருடின், அரசு
ஊழியர்களுக்கான கூட்டத்தில் கலந்து
கொள்வதோடு ஜலூர் ஜெமிலாங்
பிரச்சாரத்தையும் இங்குள்ள ஜூப்லி பேராக்
ஆடிட்டோரியத்தில் தொடக்கி வைப்பார்.
சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரான
அமிருடின், இரண்டாவது தவணைக்கு மந்திரி புசாராக கிள்ளான் இஸ்தானா ஆலம்
ஷாவில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.
சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான்
தலைவராகவும் இருக்கும் அமிருடின், கடந்த
ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெற்ற மாநிலத்
தேர்தலில் 34 இடங்களை ஹராப்பான் மற்றும்
பாரிசான் நேசனல் வென்றதைத் தொடர்ந்து
மந்திரி புசார் பதவிக்கு மீண்டும்
நியமிக்கப்பட்டார்.