குவாந்தான், ஆக 23- ரம்புத்தான் பழம் தொண்டையில் சிக்கி ஒன்பது வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் மாரான், கம்போங் சுங்கை லிங் லுவாரில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது.
மாரான், பெக்கான் தாஜாவ் சுகாதார கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட நுர் இமான் ஃபித்ரியா எனும் அச்சிறுமி இரவு 8.00 மணியளவில் உயிரிழந்ததாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. நோர்ஸம்ரி அப்துல் ரஹ்மான் கூறினார்.
சவப்பரிசோதனைக்காக அச்சிறுமியின் உடல் ஜெங்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுவதற்கு முன் சுகாதார கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் அச்சிறுமியின் தொண்டையிலிருந்து ரம்புத்தான் பழத்தை வெளியில் எடுத்ததாக அவர் சொன்னார்.
மூச்சுக் குழாயை ஏதோ ஒரு பொருள் அடைத்த காரணத்தால் அச்சிறுமிக்கு மரணம் நேர்ந்தது சவப்பரிசோதனையில் தெரிய வந்தது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை போலீசார் திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.