குளுவாங், செப் 2- இங்குள்ள சிம்பாங் ரெங்காம், ஜெராம் உலு பெனுட்டில் குளிக்கச் சென்ற நான்கு சகோதர, சகோதரிகளில் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மரணமடைந்தவர் அகமது ஏஹ்சான் நோர் ஹிஷாமுடின் (வயது 11) என்ற சிறுவன் என அடையாளம் காணப்பட்டது.
நீரில் மூழ்கிய அச்சிறுவன் உதவி கோரி கூச்சலிட்டதாகவும் எனினும், அங்கிருந்தவர்களால் அவரைக் காப்பாற்ற இயலாமல் போனதாகவும் குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
பதினெட்டு வயதான நோர் நஜிஹா தன் மூன்று சகோதரர்களுடன் சம்பவ இடத்திற்கு குளிக்கச் சென்றதாகக் கூறிய அவர், ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அகமது ஏஹ்சான் நீரில் சிக்கி உதவி கோரி கூச்சலிட்டதாகச் சொன்னார்.
எனினும், அச்சிறுவனை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுவன் பின்னர் சிம்பாங் ரெங்கம் சுகாதார கிளினிக்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்தது உறுதி படுத்தப்பட்டது என்றார் அவர்.