ஹாங்ஸோ, செப் 24- பத்தொன்பதாவது ஆசியப் போட்டியின் தொடக்க
விழா இங்குள்ள ஹாங்ஸோ ஒலிம்பிக் விளையாட்டரங்களில் கலாசார
மற்றும் முப்பரிமாண ஒளி சாகச நிகழ்வுகளுடன் நேற்றிரவு கோலாலமாக
நடைபெற்றது.
நேற்றைய இந்த நிகழ்வில் வழக்கமாக இடம் பெறும் வாண வெடி
நிகழ்வுக்குப் பதிலாக முப்பரிமாண அனிமேஷன் காட்சிகளுடன் கூடிய
டிஜிட்டல் வாண வேடிக்கை மிகச்சிறப்பான முறையில்
அரங்கேற்றப்பட்டது.
கார்பன் இல்லாத மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய ஆசியப் விளையாட்டுப் போட்டியாக 2022 ஹாங்ஸோ போட்டியை நடத்தும் உறுதி மொழிகேற்ப முற்றிலும் மாறுபட்ட முறையில் இதன் தொடக்க விழா அமைந்திருந்தது.
இந்த 2022 ஹாங்ஸோ ஆசியப் போட்டியை சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கடந்தாண்டு நடைபெற வேண்டிய இந்தப் போட்டி கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆசியா விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் அதிகமான விளையாட்டாளர்கள் பங்கேற்கும் போட்டியாகவும் இது விளங்குகிறது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 11,831 விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 11,000 விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட வேளையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10,500 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் மொத்தம் 45 நாடுகள் பங்கேற்கின்றன. உபசரணை நாடு என்ற முறையில் சீனக் குழு தேசிய கொடியுடன் அரங்கினுள் நுழைந்த போது அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகர வரிசைப்படி ஆப்கானிஸ்தான் குழு அரங்கினுள் அணிவகுத்து வந்தது.
டத்தோ சோங் கிம் ஃபாட் தலைமையிலான மலேசிய குழு 22 அணியாக
அரங்கிற்குள் நுழைந்தது. சைக்கிளோட்ட வீரர் முகமது ஷா பிர்டாவுஸ்
மற்றும் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி ஆகியோர் மலேசிய
கொடியை ஏந்தி வர விளையாட்டாளர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து
அணிவகுத்து வந்தனர். அரங்கில் குழுமியிருந்த சுமார் 80,000 இரசிகர்கள்
மலேசிய குழுவினருக்கு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.