ஈப்போ, செப் 28 - இம்மாதம் 22ஆம் தேதி கேமரன் ஹைலண்ட்ஸ், தானா ராத்தா, ஜாசார் மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
44 வயதான நந்தன் சுரேஷ் நட்கர்னி என்ற அந்நபர் தானா ராத்தா, ஹைக்கர்ஸ் ஸ்லீப் போர்ட் கெஸ்ட் ஹவுஸ்சில் நுழைவதற்கு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி பதிவு செய்ததாகவும், செப்டம்பர் 24 அன்று வெளியேறியிருக்க வேண்டும் என்றும் கேமரன் ஹைலண்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ராம்லி தெரிவித்தார்.
இம்மாதம் 22 ஆம் தேதி முதல் தனது வாடிக்கையாளர் ஒருவர் காணப்படாதது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகியிடமிருந்து கடந்த 22ஆம் தேதி தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை (சிசிடிவி) பரிசோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நபர் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியேறியதும் செப்டம்பர் 24 வரை அவர் ஹோட்டலுக்கு திரும்பாததும் கண்டறியப்பட்டது.
தானா ராத்தா, ஜாசார் மலையின் 10வது பாதையில் ஏறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவ்வாடவர் கடந்த 22ஆம் தேதி தனியாகச் சென்றது தானா ராத்தா பகுதியில் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிவந்துள்ளது என்றார் அவர்.
தொடர் நடவடிக்கையாக காவல்துறையினர் சம்பவ இடக் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்.ஏ.ஆர்.) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர் என்றும் இந்த தேடுதல் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பொது தற்காப்பு பிரிவு மற்றும் அரசு சாரா அமைப்புகளும் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 05-4915999 என்ற எண்களில் நடவடிக்கை அறையை அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அஸ்ரி பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/06/logo-polis-2.jpg)