ஷா ஆலம், செப் 30- பூலாவ் கெத்தாம், பாகான் தியோ சீயுவில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்த தோடு பெண்மணி ஒருவரும் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாற்பத்தொன்பது வயதான அந்தப் பெண்மணி தீ விபத்து ஏற்பட்ட போது அந்த வீட்டிலில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
அந்த பெண்ணைத் தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் இத்தீச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஐந்து நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தில் அந்த மூன்று வீடுகளும் 90 விழுக்காடு சேதமடைந்த தாகக் கூறிய அவர், இந்த தீயணைப்பு நடவடிக்கையில் கிள்ளான், கோத்தா ராஜா, அண்டலாஸ், மற்றும் பூலாவ் கெத்தாம் தன்னார்வலர் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டனர் என்றார் அவர்.