கங்கார், அக்.1: ஜாலான் பாடாங் நியூ, ஆராவ் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கருதப்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இன்று முதல் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக கங்கார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சித்தி நோர் ஹஸ்லிசா எம்.டி அலி ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, கை விலங்கிடப்பட்ட 38 வயதுடைய சந்தேக நபர் போலீஸ் வாகனத்தில் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
நேற்று, காலை 6 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் 31 வயதுடைய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெர்லிஸ் கண்டிஜன்ட் போலீஸ் தலைமையகத்தில், காலை 10 மணியளவில் சரணடைந்த பிறகு, பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் மற்றும் தடிமனான போர்வையில் மூடப்பட்ட நிலையில், வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்டதாக ஆராவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் அஹ்மத் மொஹ்சின் எம்.டி ரோடி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட செவிலியர், இடது மார்பில் குத்தப் பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் அவரது உடலில் சுமார் இரண்டு சென்டிமீட்டர் ஆழத்தில் ஒரு குத்து காயம் காணப்பட்டது.
அஹ்மத் மொஹ்சின், சந்தேக நபர் பொறாமை காரணமாக தனது மனைவியுடன் சண்டையிட்டதாக நம்பப்படுவதாகவும், குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் கூறினார்.
– பெர்னாமா