புத்ராஜெயா, அக் 20 – புகைபிடித்தக் குற்றங்களுக்காக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் 12 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 4,753 குற்றப்பதிவுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டுபுகையிலை வருவாய் கட்டுப்பாடு விதிமுறைகள் அமலாக்கத்தின் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்ட 23,093 வளாகங்களுக்கு மொத்தம் 9,848 குற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
டிங்கி காய்ச்சலைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கிலான 1975ஆம் ஆண்டு நோய் பரப்பும் பூச்சிகள் அழிப்புச் சட்டத்தின் அமலாக்க நடவடிக்கை குறித்து கருத்துரைத்த டாக்டர் முகமது ராட்ஸி, ஒரு குற்றப்பதிவுக்கு 500 வெள்ளி வீதம் 12 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 2,566 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
கடந்த மாதம் மொத்தம் 6,003 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் 176 வளாகங்களை மூட உத்தரவிடப் பட்டதாகவும் முகமது ராட்ஸி கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் அசுத்தமான உணவகங்களை தற்காலிகமாக மூடும் நடவடிக்கையை சாகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.