புத்ராஜெயா, நவ. 27- ஒற்றுமை அரசாங்கத்தால் இயற்றப்பட்ட கொள்கைகள் (ரிபோர்மாசி) சீர்திருத்தத்தின் உணர்வுக்கு ஏற்ப அமைந்துள்ளன என்று கெஅடிலான் ராக்யாட் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்திய 1998 பெர்மாத்தாங் பாவ் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி மடாணி பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் உள்ள பல்வேறு கொள்கைகள் கட்சியின் போராட்டங்களுடன் உண்மையாகவே ஒத்துப் போகின்றன என்பதை கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று நேற்று கெஅடிலான் கட்சியின் பேராளர் மாநாட்டின் இறுதியில் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்தார்.
எங்கள் கொள்கைகள் கட்சியின் போராட்டத்துடன் ஒத்துப்போகின்றன. இந்த கொள்கைகள் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சரியாக செயல்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்பட்டால் கட்சி 100 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
தொடக்கத்தில் சீரிய நிர்வாகத்திற்குப் போராடிய கட்சி கெஅடிலான் தான். அது ஊழலை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்தது. இப்போது மற்ற அரசியல் கட்சிகளும் அதே கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அடையாளம் மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் நிறைந்த சூழல் நடப்பில் உள்ளதை சிலாங்கூர் மந்திரி புசாரும் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் ஒப்புக்கொண்டார்
கலந்துரையாடல் மற்றும் அறிவாற்றலை வழங்குவதன் மூலம் மலாய் சமூகத்தை மேம்படுத்துவதற்கு கெஅடிலான் தொடர்ந்து முயன்று வரும் வேளையில் அதற்கு மாறாக, பெரிக்கத்தான் நேஷனல் அச்ச உணர்வையும் தவறானத் தகவல்களையும் பரப்பும் அணுகு முறையை கடைபிடிக்கிறது அவர் சொன்னார்.
தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக அச்ச உணர்வையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் தந்திரங்கள் குறித்து மலாய் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.