மெர்சிங், நவ 29- சாலையைக் கடக்கும் போது நான்கு சக்கர இயக்க வாகனத்தினால் மோதப்பட்ட மூன்றாம் படிவ மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் எண்டாவ், ஜாலான் பென்யாபோங்கில் நேற்று மாலை 3.45 மணியளவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த மாணவி பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரசாக் அப்துல்லா கூறினார்.
சம்பவ இடத்தில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பேருந்தை விட்டு இறங்கிய அம்மாணவி இருபுறமும் கவனிக்காமல் விரைவாக சாலையைக் கடந்த காரணத்தால் எண்டாவ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டோயோட்ட ஹைலக்ஸ் வாகனம் விரைந்து நிறுத்த இயலாமல் அவரை மோதித் தள்ளியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மெர்சிங் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அம்மாணவி தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக நேற்றிரவு 10.24 மணியளவில் உயிரிழந்ததாக அவர் சொன்னார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்