அம்பாங், டிச 6- இங்குள்ள பாண்டான் ஜெயாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாண்டான் இண்டா தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பில் சுமார் மூவாயிரம் கலந்து கொண்டனர்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான இஞ்சினியர் இஷாம் ஹஷிம் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற விருந்துபசரிப்புடன் கூடிய இந்த உபசரிப்பில் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டது நிகழ்வுக்கு மகுடம் சூட்டும் வகையில் இருந்தது.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் இன, சமய மற்றும் வயது வேறுபாடின்றி தொகுயின் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டது குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக இஷாம் தமதுரையில் குறிப்பிட்டார்.
இத்தகைய ஒற்றுமை உணர்வு தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதில் இதுபோன்ற நிகழ்வுகள் பெரிதும் துணை புரியும் என்றும் அவர் கூறினார்.
இந்த பொது உபசரிப்பில் உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகள், தீபாவளி ரொக்க அன்பளிப்பு வழங்குதல், அதிர்ஷ்டக் குலுக்கு, வாண வேடிக்கை, நேர்த்தியாக பாரம்பரிய உடை அணிந்தவர்களுக்கு சிறப்பு பரிசு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெற்றன.