ரவாங், டிச 6- செலாயாங் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ரவாங் சட்டமன்றத் தொகுதிகளின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கடந்த 2ஆம் தேதி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ரவாங், ஜாலான் மெக்ஸ்வெல்லில் இரவு 7.30 மணி தொடங்கி நடைபெற்ற இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய கிராமத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருந்துபசரிப்புடன் கூடிய இந்த நிகழ்வில் பாரம்பரிய நடனங்கள், கலைநிகழ்ச்சி ஆகியவற்றோடு அதிர்ஷ்டக் குலுக்கு, சிறார்களுக்கு தீபாவளி ரொக்க அன்பளிப்பு வழங்குதல் உள்ளிட்ட அங்கங்களும் இடம் பெற்றன.
இந்த தீபாவளி பொது உபசரிப்பு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.