கிள்ளான் டிச 25- அடுத்த மாதம் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
தற்போதைய கோவிட் -19 நிலவரம் நோய்த் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்புகள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கை மற்றும் சுகாதார வசதிகள் குறிப்பாக மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் சுமை ஆகிய நான்கு அளவு கோள்களின் அடிப்படையில் மதிப்பிடப்பபடுகிறது என்று அவர் சொன்னார்.
இறைவன் அருளால் வரும் ஜனவரி மாதம் (கோவிட்-19) சம்பவங்கள் குறையும். அதற்காக ஒன்றாக பிரார்த்தனை செய்வோம் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற அமானா நெகாரா கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.
கடந்த டிசம்பர் 17 முதல் 22 வரையிலான 51வது தொற்றுநோயியல் வாரத்தில் கோவிட்-29 நோய்த் தொற்று எண்ணிக்கை 29.5 சதவீதம் அதிகரித்து 22,413 சம்பவங்களாகப் பதிவாகின. முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 17,307 சம்பவங்களாக இருந்தன என்று அவர் தெரிவித்தார்.
தற்போது சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தேவைகள் மற்றும் ஒழுங்கு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன அவர் கூறினார்.
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்பதால் சிலர் கோபப்படுகிறார்கள். ஆனால் நான் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைக்கு ஆட்பட மாட்டேன். மேலும் நான் செய்வது ஆதார அடிப்படையிலானது. இது உயர்ந்த எச்சரிக்கை அமைப்புக்கு உட்பட்டது என அவர் விளக்கினார்.