ஷா ஆலம், டிச 26- கோலக்கிள்ளான் பகுதியில் லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த தொழிற்சாலைகளுக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு 13 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்ட வேளையில் இரு தொழிற்சாலைகளுக்கு உடனடி பணி நிறுத்த உத்தரவும் பிறப்பிக்கப் பட்டது என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது மொத்தம் 26 தொழிற்சாலைகள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏழு தொழிற்சாலைகள் மட்டுமே முறையான உரிமம் மற்றும் விளம்பர அனுமதியைப் பெற்றிருந்தன. எஞ்சிய 15 தொழிற்சாலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தன என்று அது குறிப்பிட்டது.
இந்த சோதனை நடவடிக்கை லிங்காரான் சுல்தான் ஹிஷாமுடின், செலாட் கிள்ளான் மற்றும் தஞ்சோங் ஹராப்பான் பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது.
இந்த சோதனையில் நகர மற்றும் கிராம திட்டமிடல் பிரிவு, கிள்ளான் மாவட்ட, நில அலுவலகம், லைசென்ஸ் துறை, சுகாதாரத் துறை, கட்டிடத் துறை மற்றும் டீம் பந்தாஸ் ஆகிய தரப்பினர் பங்கு கொண்டனர்