இஸ்தான்புல், ஜன 1- காஸா பகுதியில் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய ராணுவ நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 21,822 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 56,451 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 286 பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று அனடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறியது.
வீடுகள், பொது வசதிகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது தொடர்ந்து குறிவைக்கப்படும் தாக்குதல்களின் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல்களில் இதுவரை 65,000 வீடுகள், 117 மசூதிகள் மற்றும் 92 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், 290,000 வீடுகள், 285 கல்வி நிறுவனங்கள், 208 பள்ளிவாசல்கள் மற்றும் மூன்று தேவாலயங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்டத் தாக்குதல்கள் 25 மருத்துவமனைகள் மற்றும் 53 சுகாதார மையங்களுக்கு செயல்பட முடியாத அளவுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
போரில் கொல்லப்பட்டவர்களில் 312 சுகாதாரப் பணியாளர்கள் 40 சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் அடங்குவர். இதுதவிர 106 ஊடகவியலாளர்களும் கடமையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 7,000க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர்.
பாலஸ்தீனம் மீதான அதிகரித்து வரும் சர்வதேச அக்கறை, மோதலுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான கோரிக்கைகளை வலுப்பெறச் செய்துள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்கான முயற்சிகளையும் அதிகரித்தது.