செய்தி. சு சுப்பையா
ஷா ஆலம்.ஜன.5- 30 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் கம்போங் பூங்கா ராயா வீட்டு பிரச்சனை விரைவில் நல்ல தீர்வு காண வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
1993 ஆம் ஆண்டு அருகாமையில் உள்ள கம்போங் பூங்கா ராயா புறம்போக்கு நிலத்தில் கூடியிருந்த 74 இந்திய குடும்பங்கள் தனியார் நிறுவனத்தால் தற்காலிக நீண்ட வீடு கட்டிக் கொடுத்து குடியமர்த்தப்பட்டனர்.
2004 ஆண்டு புதிய வீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடமைப்பு திட்டமும் இடையில் கை விடப்பட்டது. அதன் பின்னர் கம்பத்து வாசிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கி வந்தனர்.
இந்த தொடர் வீட்டுக்கு வந்த முதல் தலைமுறையினர் பலர் இறந்து விட்ட நிலையில். அன்று 74 குடும்பங்களுடன் தொடங்கிய விவகாரம் தற்போது 118 குடும்பங்களாக விரிவடைந்துள்ளது.
30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இப்பிரச்னை இந்த தவணையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும் வீ.பாப்பாராய்டு வின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது. உடனே அனைத்து தரப்பினரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்து உடனடி தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
குடியிருப்பு வாசிகளின் தலைவர் கணேசன் தலைமையில் ஐவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவராசா தலைமையில் இருவரும், மாநில வீடமைப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் புர்ஹான் அலுவலகத்திலிருந்து இருவரும், சிலாங்கூர் வீடு வாரியத்திலிருந்து இருவரும், ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் வீ.பாப்பாராய்டு தலைமையில் இருவரும் இந்த சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் விரைவில் சிலாங்கூர் மாநில அரசுக்கு சொந்தமான அடுக்கு மாடி வீடுகளில் உடனடியாக தற்காலிகமாக குடியமர்த்த வேண்டும் என்று முடிவு எடுக்கப் பட்டது.
அதன் பின்னர் 3 ஆண்டு காலக் கட்டத்திற்குள் அனைவருக்கும் சொந்த வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது