டுங்குன், ஜன 6- இங்குள்ள பந்தாய் ரந்தாவ் அபாங் கடற்கரை அருகிலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது இளைஞர் நீரில் மூழ்கி மாண்டார்.
காம்ப்ளெக்ஸ் ரந்தாவ் அபாங் தேசிய பள்ளியில் பயின்று வந்த முகமது ஹஸ்ரி எஸானி அப்துல்லா என்ற அந்த இளைஞரின் சடலம் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் மீட்புப் பணியாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டதாக டுங்குன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஷரிஸால் சம்சுடின் கூறினார்.
அந்த சதுப்பு நிலப்பகுதியில் சுமார் நான்கு மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அந்த இளைஞரின் சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
அந்த இளைஞர் காணாமல் போனது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 5.13 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
டுங்குன், சுக்காய் மற்றும் கோல திரங்கானு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 22 பேரடங்கிய குழுவினர் நான்கு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர் நிலைகளில் குளிப்பது உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.