டாமன்சாரா, ஜன. 14- தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
மலேசிய திருநாட்டிலும் தைப்பொங்கல் விழா களைக் கட்டியிருக்கும் வேளையில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று பிளாங்கி டமான்சாராவில் 140 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.
பிளாங்கி டமான்சாரா ஜீவா பெர்சத்து சமூக நல இயக்கத்தின் தலைவர் குமாரி கிருத்திகா துரைசாமி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு பிளாங்கி டமான்சாரா புளோக் சி பகுதியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பிளாங்கி டமான்சாரா குடியிருப்பில் வசிக்கும் 140 குடும்பங்களுக்கு பொங்கல் பானைகள் உட்பட பொங்கல் வைப்பதற்குரிய பொருட்கள் வழங்கப்பட்ட.ன.
டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ பொங்கல் பொருட்களை எடுத்து வழங்கியதோடு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்நாட்டில் பொங்கல் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் வேளையில் பூமியின் ஏராளமான விளைச்சலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் இருக்கட்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் எம்பிபிஜே கவுன்சிலர் சுரேஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.