குவாந்தான், ஜன 25- இங்குள்ள பெக்கான் சுங்கை லெம்பிங்கில் வெள்ளத்தை கடந்து செல்ல முற்பட்ட முதியவர் ஒருவர் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
கடை உரிமையாளரான லீ யீ சோங் (வயது 62) என்ற அந்த முதியவர் நேற்று இரவு 7.00 மணிளவில் காணாமல் போனதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் கடையில் உள்ள பொருள்களை மேல் மாடியில் வைத்தப் பின்னர் அந்த முதியவர் தன் மனைவி மற்றும் மகனுடன் இடுப்பளவு நீரில் நடந்து மேடான பகுதியில் வைக்கப்பட்டுள்ள தனது காரை நோக்கிச் சென்றதாக அவர் சொன்னார்.
இருவருக்கும் மத்தியில் இருந்த அந்த முதியவர் பாதி வழியில் தமக்கு களைப்பதாக இருப்பதாகக் கூறியதாகவும் அடுத்த கணம் அவர் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அறிக்கை ஒன்று வான் முகமது தெரிவித்தார்.
அவரின் மனைவியும் மகனும் அருகிலுள்ள தூணைப் இறுகப் பற்றி உயிர்த்தப்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 3.00 மணி தொடங்கி பெய்த கனத்த மழையின் காரணமாக ஆறு பெருக்கெடுத்து சுங்கை லெம்பிங் முழுமையாக நீரில் மூழ்கியது. அருகிலுள்ள மலைப்பகுதியிலிருந்து விழிந்தோடிய நீர் சாலைகளில் புகுந்தது.